நிலக்கரி முறைகேடு வழக்கில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.360 கோடி வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து நிலக்கரியை கப்பல் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு சவுத் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1267 கோடி ரூபாய்க்கு டான்ஜெட்கோ ஒப்பந்தம் வழங்கியது. இதில் சவுத் இந்தியா நிறுவனம் போலியாக கணக்கு காட்டி ரூ.239 கோடி மட்டுமே போக்குவரத்திற்காக செலவு செய்து ரூ.908 கோடி அரசிற்கு இழப்பீடு செய்யும் வகையில் ஈடுபட்டுள்ளது என்று 2018-ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தது.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் டான்ஜெட்கோவில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை பொறியாளர் பழனியப்பன், நரசிம்மன், ஸ்ரீனிவாச சங்கர், அதிகாரி மனோகரன், சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிர்வாகிகள் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 24-ஆம் தேதி அமலாக்கத்துறை தமிழகத்தில் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான சவுத் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் டான்ஜெட்கோவில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் இல்லங்கள் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருகிறது. சவுத் இந்தியா கார்ப்பரேஷன் குழுமத்திற்கு சொந்தமான ரூ.360 கோடி வைப்பு நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
செல்வம்
