கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஜக்கனாரி பகுதியில் உள்ள அகழியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காடு ஒட்டிய விவசாய தோட்டம் ஒன்றில் வனப்பகுதி ஒட்டி பாதுகாப்பு கருதி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அதே பகுதியில் திருமலை ராஜன் என்பவருக்கு சொந்தமான பாக்கு தோப்பில், பாதுகாப்புக்காக சுருக்கு மடி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அருகே வனவிலங்குகள் வெளியேறாமல் இருக்க வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அகழிகளும் உள்ளது .
நேற்று (அக்டோபர் 28) சுமார் 11.30 மணியளவில் ஒற்றை ஆண் காட்டு யானை,அகழியினை கடந்து வெளியே வர முயன்றது. அந்த நிலையில் மின் கம்பியில் சிக்கி அகழிக்குள் விழுந்து அமர்ந்த நிலையிலேயே யானை உயிரிழந்தது.
இது குறித்து திருமலைராஜன் வனத்துறைக்கு தகவல் அளித்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்ட விசாரணையில் யானையின் வாய்ப்பகுதியில் தோட்டத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பிகள் சிக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கோவையில் இருந்து மூன்று வன கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு யானையை பிரேத பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூர் அடுத்த, குப்பேபாளையம், ராமன் குட்டை என்ற பகுதியில் ஆண் யானை ஒன்று உயர் மின் அழுத்த கம்பத்தை யானை முட்டித் தள்ளியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
