மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்

Published On:

| By Prakash

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை என்று உத்தரவிட்டதுடன், அந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செயதார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

ADVERTISEMENT

ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை.

ADVERTISEMENT
electricity number linking aadhaar with is not prohibited

மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும்.

ஆதார் இணைப்பு சமூகநல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இதில் ஆஜராகி வாதிட்ட எம்.எல்.ரவி தரப்பு, “மின் இணைப்பு எண்ணை வீட்டு உரிமையாளரின் ஆதார் எண்ணுடன் மட்டுமே இணைத்தால் அரசு அளிக்கும் மானியம் வீட்டின் உரிமையாளருக்கே கிடைக்கும்; வாடகைக்கு குடியிருப்போருக்குக் கிடைக்காது.

மேலும், இதுபோல செய்வதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் பெறவில்லை.

ஆகவே, இந்த உத்தரவு செல்லாது’’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

electricity number linking aadhaar with is not prohibited

இதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர்,

“தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தை வாடகைதாரர்கள் பெறுகிறார்களா அல்லது உரிமையாளர்கள் பெறுகிறார்களா என்பது உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் இடையிலான பிரச்னை.

மேலும், இதுபோல செய்வதற்கு சட்டரீதியான அனைத்து உத்தரவுகளும் பெறப்பட்டிருக்கின்றன” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 21) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு அடிப்படை ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் தொடரப்பட்டிருப்பதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

ஜெ.பிரகாஷ்

தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமை: உரிமைத்தொகை வழங்கிய முதல்வர்

டிச. 24: திமுக அனைத்து அணி நிர்வாகிகள் கூட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share