தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கு நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மத்திய பார்வையாளர்களாகப் பணியாற்றும் பொது, காவல்துறை மற்றும் செலவினப் பார்வையாளர்களுக்கான விளக்கக் கூட்டங்களைத் தேர்தல் ஆணையம் நேற்று பிப்ரவரி 5-ந் தேதி நடத்தியது.
டெல்லியில் நடைபெறும் இந்த விளக்கக் கூட்டங்களுக்கு 714 பொதுப் பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவினப் பார்வையாளர்கள் உட்பட 1,444 அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். இந்த விளக்க கூட்டம் இன்று 2-வது நாளாக பிப்ரவரி 6-ந் தேதியும் நடைபெற உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் மத்திய பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இதில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பார்வையாளர்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், தேர்தல்கள் நடைபெறும் 824 தொகுதிகளிலும் அவர்களின் இருப்பு முழு தேர்தல் நடவடிக்கைகளையும் ஊக்கப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இந்த கூட்டங்களின் போது, ஐடி பயன்பாடுகள், ஊடகங்கள் தொடர்பான விஷயங்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் கண்கள் மற்றும் காதுகளாக இருப்பதால், மத்திய பார்வையாளர்கள் அனைத்து தேர்தல் சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல்கள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும், அவர்களின் கடுமையான, பாரபட்சமற்ற இணக்கத்தை உறுதி செய்ய ஆணையத்திற்கு நேரடியாக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அரசியல் சட்டத்தின் பிரிவு 324, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 20B ஆகியவற்றால் வழங்கப்பட்ட முழுமையான அதிகாரங்களின் கீழ், தேர்தல் ஆணையமானது மத்திய பார்வையாளர்களை நியமிக்கிறது. இதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் ஆணையத்திற்கு அவர்கள் உதவ முடியும். கள அளவில் தேர்தல் நடைமுறையின் திறமையான மற்றும் பயனுள்ள நிர்வாகத்தையும் அவர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.
