திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுடைய மகன் கதிர் ஆனந்த் தற்போது வேலூர் எம்பியாக இருந்து வருகிறார்.
வேலூர் தொகுதியில் மீண்டும் கதிர் ஆனந்த் போட்டியிடுவாரா, மாட்டாரா என்ற கேள்வி சில வாரங்களாகவே திமுக வட்டாரத்தில் உலாவருகிறது.
2019 தேர்தலில் கதிர் ஆனந்த் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை விட சுமார் 8 ஆயிரம் ஓட்டுகளை மட்டுமே அதிகம் பெற்று விளிம்பு நிலை வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் கதிர் ஆனந்த் மீண்டும் வேலூர் எம்பி தொகுதியில் போட்டியிட இத்தொகுதிக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கதிர் ஆனந்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் திமுகவினரே ஈடுபாட்டோடு வேலை செய்ய மாட்டார்கள் என்று தலைமையிடம் தெரிவித்தனர்.
இதனால் வேலூரில் மீண்டும் கதிர் ஆனந்தை நிறுத்தலாமா வேண்டாமா என்று ஸ்டாலினே யோசித்திருக்கிறார். இதே நேரம் வன்னியர்கள் நிறைந்த கிருஷ்ணகிரி தொகுதியில் மகனை நிறுத்தலாமா என்று கூட துரைமுருகன் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் தொகுதி மாறினால் அதுவே பலவீனத்தை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும் என்பதால், மீண்டும் வேலூர்தான் என்பதில் கதிர் ஆனந்த் விடாப்பிடியாக இருந்திருக்கிறார்,.
வேலூர் மாவட்ட நிர்வாகிகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சந்தித்த பின்னால் அக்குழுவில் உள்ள உதயநிதியை துரைமுருகனும், கதிர் ஆனந்தும் சந்தித்து மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.
இந்த பின்னணியில், ‘பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகன் மகனுக்கு அவரது தொகுதியில் சீட் கொடுக்காவிட்டால், அது வேறு மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தும். எனவே கதிர் ஆனந்துக்கே சீட் கொடுத்துவிடலாம்’ என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கடுமையான விதிமீறல்” – ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
இறுதிக்கட்டத்தினை எட்டிய ‘புரோ கபடி’ வெற்றி மகுடம் யாருக்கு?