சிறப்புப் பத்தி: ஈழ அரசியலும் காலனியத்துவமும்.

Published On:

| By Balaji

முரளி சண்முகவேலன்

லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்

நவீன பிரிட்டனில் இன அரசியலுக்கான பங்களிப்பில் சிவா என்றழைக்கப்பட்ட சிவானந்தத்தினுடைய பங்கு அளப்பரியது. இன அரசியல், இன அடிப்படையிலான பாகுபாடு போன்ற கருத்தியல்கள் ஆப்பிரிக்க மற்றும் கருப்பு நிற மக்களைப் பற்றி மட்டுமே இயங்கி வந்த சூழ்நிலையில் – இன அரசியலின் தாக்கமானது தெற்காசிய நாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளதையும் அங்கு தொடர்ந்து நடைபெறும் (குறிப்பாக இலங்கையில்) பேரினவாத மக்கள்-எதிர் போக்குகளுக்குக் காரணம் காலனியமே என்பது சிவாவின் கருத்தியல்.

Eelam politics and colonialism - Murali Shanmugavelan

சிங்களப் பேரினவாதமும் காலனியமும்

இலங்கையின் சிங்களப் பேரினவாதப் போக்கும் அங்குள்ள தமிழர்கள் மேல் வன்முறையைக் கட்டவிழ்த்து விடப்பட்டதும் திடீரெனெ வந்ததல்ல என்றும் அவ்வெறுப்புக்கு வித்திட்ட காலனியக் காரணங்களைப் புறந்தள்ள ஆகாது என்ற கருத்தையும் சிவா முன்வைக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப் படுகொலை, அதிகார துஷ்பிரயோகம், துரோகம், உள்ளூர் அரசியல்வாதிகளின் மனிதாபினமற்ற செயல்கள் ஆகியவற்றுக்கும் காலனிய மனநிலைக்கும் உள்ள தொடர்ச்சியை மறுதலிக்க இயலாது என்பது சிவாவின் பார்வை. பின் வருவது இலங்கை அரசியல் குறித்த சிவானந்தனின் நிலைப்பாடாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் இலங்கைத் தீவினை ஐரோப்பியர்கள் கைப்பற்றிய பொழுது இலங்கை மூன்று பகுதிகளாக இருந்தது. சிங்கள புத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கண்டி இராச்சியம் (தென் கிழக்கு) அதில் ஒன்று. இப்பகுதியில் பழங்கால அரேபியர்கள்; கேரள மலபார் பகுதியிலிருந்து வந்த மக்கள் வசித்துவந்தனர். பிறகு இப்பகுதி டச்சு மற்று போர்த்துக்கீசியர்களின் வரவுக்குப் பின் உள்ளூர் மக்களுடன் உறவு கொண்டு கலப்பினக் குடிகளும் தோன்றின. மேற்குப் பகுதி வணிகர்களுக்கானதாக இருந்தது. வடக்குப் பகுதியில் தமிழர்கள் வசித்துவந்தனர். இங்கே உயர் சாதி வெள்ளாளர்களிடம் (சாதிய) அதிகாரம் இருந்தது.

450 ஆண்டுகளாக இலங்கையில் டச்சு, போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என ஐரோப்பியர்களின் காலனிய ஆட்சி தொடர்ந்து நடந்து வந்தாலும் ஆங்கிலேயர்களே இலங்கையின் மீதான முழு ஆதிக்கத்தைச் செலுத்தினர். 1815ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் ஒப்பந்தக் கூலிகள் இறக்குமதி செய்யப்பட்டார்கள்.

கறுப்பர்களின் அடிமைத் தொழில் ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பின், தமிழர்களே பெருவாரியாக ஒப்பந்தக் கூலிகளாக உலகம் முழுவதும் அனுப்பப்பட்டனர் என்பது இங்கே ஒரு முக்கியமான குறிப்பாகும். இவ்வாறாக இலங்கையில் ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழர்கள் வந்திறங்கியபோது அவர்கள் உள்ளூர்வாசிகளை விட ஒரு படி கீழே மதிக்கப்பட்டனர். சிவாவின் பார்வையில், இலங்கையில் தமிழர்களின் ஒடுக்கப்பட்ட வரலாற்றின் ஆரம்பம் காலனியத்தின் பிடியிலேயே ஆரம்பமாகிறது.

Eelam politics and colonialism - Murali Shanmugavelan

பொருளாதார உழைப்புச் சுரண்டல்

அடிமைத்தனத்துக்கு அடுத்தபடியாக காலனியத்தின் இரண்டாவது முக்கியக் கொள்கையானது பொருளாதார உழைப்புச் சுரண்டல். இது வெற்றிகரமாக நிகழ வேண்டுமெனில் அடிமை நாடுகள் பொருளாதாரக் காரணங்களுக்காக ஒரு ‘தேசமாக’ கட்டியெழுப்பப்பட வேண்டும். அதே சமயத்தில் காலனிய நாடுகளுக்குள் உள்ள பல்வேறு இனங்கள் ஒற்றுமையாகக் கூடினால் காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக அது முடியும் என்பதால் உள்ளூர் மக்களைப் பிரித்து வைப்பது காலனியத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது. சிவாவைப் பொறுத்தவரையில் இந்தக் காலனிய நச்சு சிந்தனையானது இன்று வரையில் ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது. வடக்கில் வந்து சேர்ந்த ஒப்பந்தக் கூலிகளான தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகளாக அடிமைப்பட்டது காலனிய ஆட்சியின் உத்தியில் ஒன்றெனெ சிவாவின் காலனியப் பார்வை உணர்த்துகிறது. இந்த இரண்டாந்தரப் போக்கு சுதந்திரத்திற்குப் பின் பௌத்த சிங்களவர்களால் தொடரப்படுகிறது.

இந்தியாவில் நிகழ்ந்ததைப் போன்று இலங்கையில் பெரிதாக சுதந்திர இயக்கம் ஒன்றும் இல்லை எனவும், இந்தியா போன்ற நாடுகள் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி விடுதலை பெற்றதின் பின்னணியிலேயே இலங்கை ‘சுதந்திரம்’ அடைந்தது எனவும் சிவா குறிப்பிடுகிறார்.

Eelam politics and colonialism - Murali Shanmugavelan

ஆட்சி மாற்றத்தின் பொருள் என்ன?

இந்தியாவின் அரசியல் அறிஞர் ஞான அலோசியஸ் குறிப்பிட்டது போல சுதந்திரம் என்பது காலனிய வெள்ளை அதிகாரத்திற்கும் உள்ளூர் உயர்சாதிக் குழுக்களுக்கும் (அல்லது பிரபுக்களுக்கும்) இடையேயான அதிகாரப் பரிமாற்றமாகவே நிகழ்ந்துள்ளதை சிவாவும் சுட்டிக் காட்டுகிறார். இலங்கையில் இந்த அதிகாரப் மாற்றமானது ஆங்கிலேயர்களிடமிருந்து பௌத்த சிங்களவர்களுக்குக் கிடைத்தது. அதாவது பௌத்த சிங்களவர்கள் ஆங்கிலேயே காலனிய இடத்தை நிரப்பினர் என்றால் அது முற்றிலும் மிகையல்ல. அது மட்டுமல்லாமல் உள்ளூரில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் தமிழர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவும் இந்த ஆட்சி மாற்றம் ஏதுவாக இருந்தது.

உதாரணமாக, காலனியத்தின்போது அரசு அலுவலகத்தில் எழுத்தர்களாக, குமாஸ்தாக்களாக ஊக்குவிக்கப்பட்ட தமிழர்களின் பரவலான எண்ணிக்கையானது காலனிய அரசாங்கத்தைத் தமிழர்கள் எடுத்து நடத்திவருவது போல ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருந்தது. இது சிங்களவர்களின் மனங்களில் மிகுந்த பொறுமலையும் வெறுப்பையும் உருவாக்கியிருந்தது என்றால் மிகையல்ல. காலனிய அதிகார மாற்றத்திற்குப் பின்னர் தமிழர்களை அவர்களது ‘இடத்தில் வைக்க’ சிங்களவர்களுக்கு கிடைத்த புதிய அதிகாரம் ஏதுவாக இருந்தது என சிவா குறிப்பிடுகிறார்.

சிவாவின் தந்தை அஞ்சல் அதிகாரியாகக் கொழும்பில் பணியாற்றிவந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இதனால் இள வயதில் தனக்குப் பெரிதாகத் தமிழ் அடையாளம் எல்லாம் இல்லை என்பதை சிவா ஒப்புக்கொண்டிருக்கிறார். மாறாக கம்யூனிஸ்ட் சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டதாகப் பதிவு செய்துள்ளார்.

கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, மலையகத்தில் தமிழ் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சென்றபோது ‘தமிழன் என்ற உணர்வும் தமிழன் என்ற பிரக்ஞையும் தனக்கு சுத்தமாக இல்லை’ என்றும் சிவா ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளார். கொழும்பில் தனது குடும்பத்தோடு வாழ்ந்து வந்தபோது, தனது மகள் தமிழர்களை ஒதுக்கிவைக்கும் சிங்களவர்களின் பொதுப்புத்தியைக் கொண்டிருந்ததையும் பின்னாளில் பதிவு செய்துள்ளார். சிங்களர்களை மட்டுமே ‘அங்கிள்’ என்று விழைத்ததாகவும் தமிழர்களை ‘அங்கிள் கிடையாது. அவர் தமிழன்’ என்று தனது மகள் குறிப்பிட்டதையும் நினைவுகூர்கிறார்.

வடக்கில் ஒடுக்கப்பட்டு அவதியுறும் தமிழர்கள் ஒரு புறம்; கொழும்பிலோ குமாஸ்தா பரம்பரைகளாக மற்றொரு வகையான தமிழர்கள் ஒரு புறம். இந்த இரண்டு நிகழ்வுகளும்யதேச்சையானதல்ல; காலனியத்தின் கூறுகளே என சிவா பதிவு செய்கிறார்.

இப்படிப்பட்ட காலனியக் கூறுகள் சுதந்திர இலங்கையில் எவ்வாறு தமிழர்களின் உயிரையும் உணர்வையும் அரசியலையும் பாதித்தன என்பது பற்றிய சிவாவின் எண்ணங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Eelam politics and colonialism - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)

கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]

கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]

கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]

கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]

கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]

கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share