உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நம்முடைய இருபெரும் தலைவர்கள் தெய்வ சக்திமிக்கவர்கள் என்பது தெளிவாகியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி உருக்கத்துடன் பேசியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வானது, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பினை வழங்கியது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த அதிமுக தரப்பினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் இல்ல திருமணத்தில் பங்கேற்றார். மேலும் அதே மேடையில் 51 ஜோடிகளின் இலவச திருமணத்தையும் முன்னின்று நடத்தி வைத்தார்.
தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில், ”உச்சநீதிமன்றம் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று நேற்று இரவு தெரிந்தது முதல் தூக்கமே வரவில்லை.
நாளை மதுரைக்கு திருமணம் செல்கிறோம். நல்ல முடிவு வரவேண்டுமே என்று கவலையோடு இருந்தேன்.
மதுரைக்கு காலையில் வந்ததும், என்னை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “அண்ணா, திருமண மேடைக்கு ஏறுவதற்கு முன்பு எம்.ஜி.ஆர் சிலைக்கும், அம்மா ஜெயலலிதா சிலைக்கும் முதலில் நீங்கள் மாலை அணிவிக்க வேண்டும்” என்று சொன்னார்.
அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது, ’51 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடிய இந்நன்னாளில் நல்ல தீர்ப்பு வரவேண்டும். உங்களது இருவரின் ஆசியும் அதற்கு வேண்டும்’ என வேண்டினேன்.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. இதனால் நம்முடைய இருபெரும் தலைவர்கள் தெய்வ சக்திமிக்கவர்கள் என்பது தெளிவாகியுள்ளது.
திமுக ஒரு தீய சக்தி. அதை அழிப்பதற்காக அதிமுக தோற்றுவிக்கபட்டதாக எம்.ஜி.ஆர். கூறினார். தனது இறுதி மூச்சுவரைக்கும் திமுகவை எதிர்த்து வெற்றிகண்டவர் நமது தலைவர் எம்.ஜி.ஆர்.

அதே வழியில் வந்த ஜெயலலிதா, தனக்கு வந்த எத்தனையோ இடர்பாடுகளையும், அவமானங்களையும் கடந்து தனது காலத்தில் திமுகவை சாய்த்து காட்டினார்.
அவர் சட்டமன்றத்தில் ‘எனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் தொடர வேண்டும்’ என்று கூறினார். அது இன்று நிரூபணமாகியுள்ளது.
திமுகவின் பி டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட கடந்த 6,7 மாதங்களாக அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அம்மா கட்டிக் காத்த கட்சி அதிமுக. இது மக்களுக்காக உழைக்கின்ற இயக்கம். அதிமுக ஒன்றும் குடும்ப கட்சி கிடையாது. குடும்பத்திற்காக உழைக்கின்ற கட்சி கிடையாது.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்றவர்கள் உருவாக்கிய, கட்டிக்காத்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்து பார்க்க முடியாது என்பதை இன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது.” என்று பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பொதுக்குழு செல்லும் என்பது ’தெய்வத்தின் வாக்கு!’ – ஆர்.பி உதயகுமார்
இரட்டை இலை கிடைத்ததால் ஈரோட்டில் வெற்றி பெறுவார்களா? – டிடிவி தினகரன்
