எதிர்நீச்சல் தொடரின் மைய புள்ளியாக இருந்தவர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மாரிமுத்து. இவர், திடீரென மரணமடைந்துள்ள நிலையில், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு இணையான, கம்பீரமான உடல் மொழி, குரல் மொழி கொண்ட நடிகர் தேவை.
எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து ஆதி குணசேகரனாக வாழ்ந்திருப்பார் அதுதான் அவரை டிரெண்டிங் நட்சத்திரமாக புயல் வேகத்தில் உயரகொண்டு சென்றது.
தனியார்தொலைக்காட்சிகளுக்கு மத்தியில் டிஆர்பி-யை மைய புள்ளியாக வைத்து, பல சீரியல்களுக்கு இடையே ரேஸ் நடந்து வந்தாலும், ஒவ்வொரு வாரமும், முதல் அல்லது இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டு வந்தது ‘எதிர்நீச்சல்’ தொடர்.
திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் சன் டிவியில் தினம் தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் சமீபத்தில் தான் 500 எபிசோடுகளை எட்டியது. இதனை எதிர் நீச்சல் குழுவினர் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமே ஆன நிலையில், மாரிமுத்துவின் மரண செய்தி எதிர்நீச்சல் குழுவினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
மாரிமுத்து, குணசேகரன் கேரக்டரில் வில்லத்தனத்தை வெளிப்படுத்தினாலும் இவருக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவரது ‘ஏய் இந்தா மா’ போன்ற வசனங்கள், மற்றும் டைமிங் காமெடி போன்றவை எதிர்நீச்சல் தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என கூறலாம்.
இயக்குனர் திருச்செல்லாம் கூட நேற்று மருத்துவமனையில் மாரிமுத்துவின் இழப்பு குறித்து பேசியபோது, “எதிர்நீச்சல் சீரியலுக்கு இது மிகப்பெரிய இழப்பு என்றும் எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்” என கூறி இருந்தார்.
இப்படி ஒரு மிகப்பெரிய ஆளுமையை எதிர்நீச்சல் குழு இழந்திருந்தாலும், அடுத்தடுத்து இந்த தொடரின் படப்பிடிப்பை, தொடர்ந்து நடத்தி ஒளிபரப்ப வேண்டிய பொறுப்பு, இயக்குனர் திருச்செல்வத்திற்க்கு உள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடிக்க கிட்டத்தட்ட மாரிமுத்து போன்ற உடல் மொழியும், குரல் வளமும் உள்ள எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி தேர்வு செய்யப்படலாம் என சின்னத் திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
இராமானுஜம்