கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 23) தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அணியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்ப்பு குறித்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “இந்த வெற்றிக்காக உழைத்த கழக வழக்கறிஞர் சண்முகம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சிலர் தர்ம போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையாகத் தர்மத்திற்காகப் போராடியவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இந்த நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ அதை எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செய்வார்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அப்படிப் பார்த்தால் அவர் இந்த கட்சிக்காக எவ்வளவு தூரம் எதிர்த்துச் செயல்பட்டிருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த வெற்றி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும். வேட்பாளர் தென்னரசுவின் வெற்றி எடப்பாடி பழனிசாமியின் வெற்றி. ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார்.
முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இந்தக் கட்சி(அதிமுக) இல்லை. எங்கிருக்கிறது என்று கேட்டார். காங்கிரஸ் தலைவரும் கேட்டார். அவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். அது கட்சி சார்ந்த நடவடிக்கை” எனக் கூறினார்.
பிரியா
எப்போது பொதுச் செயலாளர் ஆவீர்கள்?: எடப்பாடி பதில்!
ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: எஸ்.பி. வேலுமணி