பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவச விவகாரத்தில் அறங்காவலர் காந்தி மீனாவை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இன்று(அக்டோபர் 14) பசும்பொன் சென்றிருக்கின்றனர்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.
மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அந்த கவசத்தை ஒவ்வொரு ஆண்டும் அதிமுக பொருளாளர் வங்கிக்கு நேரில் சென்று பெற்றுக்கொண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார்,
குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைப்பது வழக்கம். அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தான் இதனை செய்து வந்தார்.
ஆனால் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து இருக்கின்றன.
பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்ததுடன் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அதிமுக கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த நியமனம் எதுவும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார்.
இந்தநிலையில் வரும் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசத்தை பெறுவதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே போட்டி நிலவுகிறது.
இரு தரப்பும் தங்க கவசத்துக்கு உரிமை கோரி மதுரையில் கவசம் பாதுகாக்கப்பட்டு வரும் தனியார் வங்கியில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
அதே சமயம் கவசத்தை பெறுவதற்கு தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவின் ஒப்புதலும் அவசியம்.
அதனால் அவருடைய ஆதரவை பெறுவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார்,
செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகள் இன்று(அக்டோபர் 14) பசும்பொன் சென்றிருக்கின்றனர்.
விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதாக சரித்திரமில்லை என்று நேற்று சசிகலா வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று பசும்பொன் சென்றுள்ளனர் எடப்பாடியின் தூதர்கள்!
கலை.ரா
’நிராகரிப்பு வாழ்க்கையில் ஒரு அங்கம்’: ஜெய்ஷாவை சாடிய கங்குலி
