அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (மார்ச் 3) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினோம். வரும் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினோம்.”
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவர்கள் என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.
சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அக்கட்சி என்டிஏ-வில் இணைய வாய்ப்புள்ளதா எனக் கேட்கப்பட்டபோது, “அது குறித்து நேற்று அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பில் பேசவில்லை. எங்களைப் பொறுத்தவரை என்டிஏ கூட்டணி சுமூகமாக உள்ளது” என்று தெரிவித்தார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, “தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவாக நடைபெறும். எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது. எதற்கும் கவலை இல்லை.
ஆனால் திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது. காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக செயல்படும்” என்று உறுதிப்படக் கூறினார்.
