அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (மே 28) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், தண்டனை விவரங்களை ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை.
விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிமன்றத்துக்கும் நன்றி. காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது “குற்றம் நடக்கக் கூடாது. நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது. விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்”. Edappadi reacts anna university sexual judgment

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், மக்கள் மன்றத்தில் இந்த வழக்கு குறித்து, ஸ்டாலின் மாடல் அரசு மீது நிலவும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது ஏன்? விடுதலை மற்றும் மீண்டும் கைதுக்கு இடையில் என்ன நடந்தது?
ஞானசேகரன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் அளவிற்கு நெருக்கமாக இருந்த ஸ்டாலின் அரசின் அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் இந்த வழக்கில் விசாரிக்கப்படாதது ஏன்?
SIT-ல் பணியாற்றிய DSP ராகவேந்திரா ரவி ராஜினாமா செய்தது ஏன்? உயர் அதிகாரிகள் அழுத்தம் என்று வந்த செய்திகளுக்கு என்ன விளக்கம்?
இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான, இந்த வழக்கின் மூலக் கேள்வியான யார் அந்த SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது.
வழக்கு விசாரணையின் முதற்கட்டம் முடிவதற்குள்ளேயே, ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லை என்று எதற்காக ஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?
யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? பாதி நீதியால் தப்பித்துவிடலாம் என்று எண்ணினால், அந்த எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.
காலம் மாறும், காட்சிகள் மாறும் விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த SIR யாராக இருந்தாலும் கூண்டேற்றப்படுவார். SIR-ஐக் காக்கும் சார்களையும் உடன் ஏற்றி ,அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும், பாலியல் குற்றங்களும், கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
