அண்ணா திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பூத் கமிட்டி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கடலூர் எம்சி சம்பத் உள்ளிட்டோரை மிக கடுமையாக விளாசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. Edappadi Palaniswami AIADMK
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று ஜூன் 24, இன்று ஜூன் 25 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மா.செ.க்கள் கூட்டத்துக்கு வரும் போதே, பூத் கமிட்டி தொடர்பான முழுமையான விவரங்களுடன் வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. பூத் கமிட்டியில் இடம் பெறும் 9 பேரையும் ஒரே பிரேமில் போட்டோ எடுக்க வேண்டும்; எந்த மாவட்டம்? எந்த சட்டமன்ற தொகுதி? எந்த பூத் என்ற விவரமும் அதில் இருக்க வேண்டும்; ஒவ்வொரு பூத் கமிட்டி மெம்பரிடமும் அட்டை அல்லது சிலேடு ஒன்றை கொடுத்து அவர்களது விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்குமாறு போட்டோ எடுக்க வேண்டும்; இதை எல்லாம் தொகுத்து ஆல்பம் மாதிரி ரெடி செய்து கொண்டு வர வேண்டும் என ரொம்பவே கவனமாக ஆர்டர் போட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
சென்னையில் நேற்று தொடங்கிய மா.செ.க்கள் கூட்டத்தில் இந்த பூத் கமிட்டி விவகாரத்தைதான் எடப்பாடி கையிலெடுத்தார். இந்த மா.செ.க்கள் கூட்டத்தில், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் எப்படி PEN டீம் ரிப்போர்ட், உளவுத்துறை ரிப்போர்ட்டை வைத்து கொண்டு நிர்வாகிகளிடம் விலாவாரியாக பேசுகிறாரோ அதே பாணியில் எடப்பாடி பழனிசாமியும் பேசி இருக்கிறார்.

கரூர் மா.செ.வான முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை பார்த்து, “கரூர் மாவட்ட பூத் கமிட்டி சரியாக இல்லை என பல முறை உங்ககிட்ட சொல்லி இருக்கேன்.. பூத் கமிட்டி என்பதுதான் பேஸ்மெண்ட்.. அதுதான் ஸ்டிராங்கா இருக்கனும்.. பூத் கமிட்டியில் 45 வயதுக்குட்பட்டவங்களை போடுங்கன்னு சொன்னேன்.. ஆனா 46,47, 48 வயது ஆளுங்களை எல்லாம் போட்டு வெச்சிருக்கீங்க.. எனக்கு 45 வயதுக்குள்ள இருக்கிறவங்கதான் பூத் கமிட்டியில் இருக்கனும்” என காட்டமாகவே சொன்னாராம்.
இதனால் ஆடிப்போன எம்ஆர் விஜயபாஸ்கர், “நீங்க சொல்றதை எல்லாம் சரி செஞ்சுடலாம்ணே” என கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கடலூர் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்திடம், “நான் சொன்ன மாதிரி நீங்க ஆல்பம் போடலையே.. அதில் பலரோட விவரமும் இல்லையே” என எடப்பாடி கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கு, “அண்ணே 10% மிஸ்ஸாகி இருக்கு.. இந்த 10%-த்தை சரி செஞ்சுடலாம்” என எம்சி சம்பத் சொல்ல,
“என்னது 10%” ஆ? என எடப்பாடி கமெண்ட் அடிக்க, கூட்டம் லேசாக கலகலப்பானது.
இப்படி ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் கொடுத்த பூத் கமிட்டி டேட்டாக்களை தம்மிடம் ஏற்கனவே உள்ள டேட்டாக்களுடன் ஒப்பிட்டு, நாம சொன்ன மாதிரி 9 பேர் இருக்காங்களா? 45 வயதுக்குள்ளதான் இருக்காங்களா? என்றெல்லாம் ஒவ்வொரு பாயிண்ட்டையும் நோட் செய்தபடியே சுட்டிக்காட்டி பேசினார் எடப்பாடி பழனிசாமி.
இதன் பின்னர் மா.செ.க்களிடம் பேசிய எடப்பாடி, நமக்கு பூத் கமிட்டி பலமாக இருக்கனும்.. இதைத்தான் பல முறை சொல்லி இருக்கேன்.. பூத் கமிட்டியை நான் சொன்னபடி சரியாக போட்டாதான் மற்ற வேலைகளை சரியாக செய்ய முடியும்.. உங்க மாவட்டத்துல மக்களோட பிரச்சனைகளை கையில் எடுங்க.. மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துங்க.. என்கிட்ட கேட்கனும் என்பது இல்லை.. கொஞ்சம் பெரிய விவகாரமாக இருந்தால் சொல்லுங்க.. நானே போராட்டத்துல வந்து கலந்துக்கிறேன்.. நம்ம கூட்டணியில் பல கட்சிகள் வருவாங்க.. வலுவான கூட்டணியாக, வெற்றி கூட்டணியாக அமையும்.. அதை பற்றி கவலைப்படாதீங்க.. நமக்கு டைம் அதிகமாகவும் இல்லை.. அதனால நாங்க சொல்றபடி கரெக்டா செஞ்சுட்டு வாங்க..ரிசல்ட் நல்லா இருக்கும்” என வகுப்பு எடுத்திருக்கிறார்.
