மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து இன்று (ஜூலை 27) சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.
கடந்த ஜூலை 25ஆம் தேதி சென்னையைத் தவிரத் தமிழகம் முழுவதும் மற்ற மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 10 மணிக்குச் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு காலை 9 மணி முதலே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் குவிய தொடங்கினர். 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிடுவார் என எதிர்பார்த்து அதிமுகவினர் காத்திருந்தனர். ஆனால் அவர் 10.45 மணியளவில் தான் ஆர்ப்பாட்ட களத்துக்கு வந்தார்.
11 மணியளவில் திமுக அரசைக் கண்டித்து தனது கண்டன உரையைத் தொடங்கினார். “14 மாதம் திமுக ஆட்சியில் விலைவாசி,சொத்து வரி,மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக நடத்திய போராட்டத்தைப் பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். காற்றுக்குத் தடை போட முடியாது, அதுபோல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒரு போதும் தடை போட முடியாது” என்று பேசினார்.

பேச்சின் நடுவே அருகிலிருந்தவர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டே பேசினார். “ஒரு கட்டத்தில் வெயில் வேற மண்டைய பொளக்குது நான் வேற லேட்டா வந்துட்டேன். நீங்கள் எல்லாம் 9 மணியிலிருந்து காத்துகிட்டு இருக்கீங்க” என்று மேடைக்கு கீழ் இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்.
பின்னர் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதை அருகிலிருந்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் அங்கிருந்தவர்கள் ஆர்ப்பாட்டத்துக்காகக் கையில் ஏந்தியிருந்த பதாகைகளை நிழலுக்காகப் பிடித்தனர். மேடையிலிருந்த நாற்காலியில் அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர். தொடர்ந்து விசிறிவிட்டு முதலுதவி சிகிச்சை கொடுத்தனர்.
இந்நிலையில் அவர் மருத்துவமனைக்குச் செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது ஆர்ப்பாட்டத்திலிருந்த அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரியா