Edappadi Palaniswami Annamalai wishes to premelatha
தேமுதிக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றிருக்கும் பிரேமலதா விஜயகாந்த்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இன்று (டிசம்பர் 15) வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருவேற்காட்டில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதாவைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரேமலதாவும் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராகப் பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த்துக்கு எனது வாழ்த்துக்கள்,
தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
அண்ணாமலை
“தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கேப்டன் விஜயகாந்த்துக்குப் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி , தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
தமிழக மக்களின் பேரன்புக்கு உரியவரான விஜயகாந்த்தின் ஆற்றலும், துணிச்சலும் பிரேமலதா விஜயகாந்த்திடமும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். கேப்டன் முன்னெடுத்த மாற்று அரசியலை, மேலும் பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றதும் பேசிய பிரேமலதா, ‘தமிழ்நாட்டில் 2024இல் நமது எம்பி கணக்கைத் துவங்குவோம். தேமுதிக இல்லாமல் எந்த கூட்டணியும் அமையாது. கூட்டணி அமைக்கும் போது ராஜ்யசபா ஒப்பந்தமும் போடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனால் தேமுதிக யார் கூட்டணியில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், பிரேமலதா பொறுப்பேற்று ஒருதினம் கழித்து அதிமுக, பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கொரோனா பரவல்: பதற்றமடைய வேண்டாம் – மா.சுப்பிரமணியன்
தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை!
Edappadi Palaniswami Annamalai wishes to premelatha