சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச அனுமதி அளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 18) கோரிக்கை வைத்தார். Edappadi Palanisamy request Sengottaiyan
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பேசும்போது, “பள்ளி கல்வித்துறை சார்பில் இன்னும் பல்வேறு கட்டடங்கள் கட்டப்படாமல் இருக்கிறது. அதனால் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்ட வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அவருக்கு பதிலளித்த பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கட்டிடங்கள் பெரிய அளவில் புதிதாக கட்டப்படவில்லை” என்று பேசினார்.
இதனையடுத்து முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்ற முறையில் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க செங்கோட்டையனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை அப்பாவு நிராகரித்தார்.
அண்மைக் காலமாக எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இன்றும் எதிர்க்கட்சி தலைவர் அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Edappadi Palanisamy request Sengottaiyan