சென்னை மெட்ரோ ரயிலில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிறுத்தம் வரும்போது ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம்.

சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது தமிழக அரசு சூட்டிய புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ இரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என அறிவிப்பு செய்யாமல் புறநகர் பேருந்து நிறுத்தம் என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. அதிமுக அரசு சூட்டிய பெயரை மெட்ரோ இரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, உடனடியாக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது ஏற்கெனவே அறிவிப்பு செய்து வந்தபடி புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.
அவ்வாறு செய்யாமல், தொடர்ந்து ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அதிமுக சார்பில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
