மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (செப்டம்பர் 30) நேரில் அஞ்சலி செலுத்தினர்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னை, தேனாம்பேட்டை, ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலை 11.20 மணி அளவில் காலமானார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமான மக்கள், அரசியல் தலைவர்கள், வேளாண்மை, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள வேளாண் துறை அமைச்சர் பி.பிரசாத், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதி ஊர்வலம், தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
இந்த இறுதி ஊர்வலத்திலும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளனர். மதியம் 12 மணியளவில் பெசன்ட்நகர் மயானத்தில் காவல் துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
மோனிஷா
“ஹிட்லர்” ஆக மிரட்ட போகும் விஜய் ஆண்டனி: வெளியான மாஸ் அப்டேட்!