எடப்பாடி எக்ஸ்பிரஸில் பன்னீருக்கு இடமில்லை என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பொதுக்குழுவில் பேசியிருக்கிறார்.
இன்று (ஜூலை 11) அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் கூடியிருக்கிறது. இதில் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, “ஆட்சி மாறினாலும் அதிமுகவில் இருந்து ஒரு தொண்டனும் திமுகவுக்கு செல்லவில்லை. எனவே அதிமுகவை அழிப்பதற்காக கொடநாடு கேஸை திமுக கையிலெடுத்துள்ளது. அதை இங்குள்ள சிலரும் கையிலெடுத்துள்ளனர். நான் இங்கே ஒரு கேள்வியை கேட்கிறேன். துரோகிகள் கட்சிக்குத் தேவையா? காட்டிக் கொடுப்பவர்கள் தேவையா? கடந்த இரு வாரங்களாக எடப்பாடியை நான் கவனித்து வருகிறேன், ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் உழைத்து வருகிறார். தீர்ப்பு வந்த அன்று இரவு முழுதும் அவர் உறங்கவில்லை.
அண்ணன் எடப்பாடி பொறுமையாக இருந்ததால்தான் இந்த பொதுக்குழு இன்று சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எப்போது தேர்தல் வரும், அண்ணனை முதல்வர் ஆக்கலாம் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடி எக்ஸ்பிரஸ் புறப்பட்டுவிட்டது. 2024 இல் இந்த எக்ஸ்பிரஸ் செங்கோட்டையை சென்றடையும். அடுத்து எடப்பாடி எக்ஸ்பிரஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்து ஆட்சியைக் கைப்பற்றும். இந்த எக்ஸ்பிரஸில் இங்கே வந்தவர்களுக்குதான் இடம். அவர்களுக்கு இடமில்லை” என்று பன்னீரை மறைமுகமாகக் கூறினார் தங்கமணி.
அதாவது அதிமுகவில் இனி பன்னீர் செல்வத்துக்கு இடமில்லை என்பதை பகிரங்கமாக பொதுக் குழுவில் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
–வேந்தன்
