அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருந்து வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 9) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து ஜூன் 13-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி கரூர்- கோவை சாலையில் உள்ள செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, சின்ன ஆண்டாள் பகுதியில் உள்ள தனலட்சுமி மார்பில்ஸ், தனம் பேக்டரி ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதியும் இந்த சோதனை தொடர்ந்தது.
அதன்படி கரூர் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்தில் வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் கரூர்-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ராம்நகரில் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை செய்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் விசாரணையை எதிர்கொண்டு வரும் நிலையில்… கரூரில் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“மணிப்பூரில் பாரத மாதா கொல்லப்பட்டாள்” – நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய ராகுல்
