கேரளா அரசின் ‘மசாலா பத்திரங்கள்’ விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை நோட்டீஸ் ஏன்?
- 2019 ஆம் ஆண்டில் கேரளா மாநில அரசு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் Kerala Infrastructure Investment Fund Board KIIFB உருவாக்கியது.
- இது லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் Masala Bonds- ‘மசாலா கடன் பத்திரங்களை’ வெளியிட்டது.
- இந்த மசாலா பத்திரங்கள் மூலம் ரூ.2,150 கோடி நிதி திரட்டப்பட்டது.
- நாட்டிலேயே இத்தகைய பத்திரங்களை வெளியிட்ட முதல் மாநிலம் கேரளா.
- KIIFB திரட்டிய நிதியில் ரூ.466.91 கோடி அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (ஃபெமா FEMA) மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளை மீறி நிலம் கையகப்படுத்துதலுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு.
- நிலம் கையகப்படுத்துதலுக்கு இத்தகைய நிதியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்கிறது அமலாக்கத்துறை.
- இந்த புகாரின் அடிப்படையில் KIIFB-ன் தலைவரான கேரளா முதல்வர் பினராயி விஜயன். துணைத் தலைவரான முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் KIIFB தலைமைச் செயல் அதிகாரி K.M. ஆபிரகாம் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- மசாலா பத்திரங்கள் தொடர்பான விசாரணையை 2021-ம் ஆண்டே அமலாக்கத்துறை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாமஸ் ஐசக் விசாரிக்கப்பட்டார்.
பினராயி விஜயன் விமர்சனம்
இந்த நோட்டீஸ் குறித்து கருத்து தெரிவித்த பினராயி விஜயன், “இது அரசியல் உள்நோக்கம் கொண்டது; உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக இதுபோன்ற நோட்டீஸ்கள் வருவது வழக்கம்” என கூறியுள்ளார்.
