சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் இன்று (ஏப்ரல் 25) ஆஜராகினர்.
தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.
இதனையடுத்து மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
இதேவேளையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், கரூர் ஆட்சியர் தங்கவேல், தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப், வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் மேரி ஸ்வர்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக இன்று காலை வந்தனர்.
அப்போது அவர்களிடம் நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் உள்ள சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகக்கோரி அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நுங்கம்பாக்கம் குஷ்குமார் சாலையில் உள்ள சென்னை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜரானார்கள்.
அவர்களிடம் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மணல் அள்ளப்பட்டதா? பர்மிட் இல்லாத இடங்களில் மணல் எடுக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பியதாக தெரிகிறது. தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில், மீண்டும் மணல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலகப் புத்தக தின நினைவு அலைகள்!
காங்கிரஸ் தாலியை பறிக்குமா? – மோடியிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட கார்கே