வங்கி மோசடி புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால் 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ள நிறுவனங்கள் மீது புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக 2021 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து சோதனை மேற்கொண்டது.
இந்த சூழலில் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி கடந்த ஜூலை 7ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
அப்போது சிபிஐக்கு ரூ.15 லட்சம் அபராதமும் தமிழ்நாடு சமரச தீர்வு மையத்துக்கு ரூ.15 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று ரவிச்சந்திரனுக்கு நிபந்தனை விதித்தார்.
மேலும் இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை என்றும் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்படவில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் சிபிஐ தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்ய வேண்டும். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்று ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்..
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ் ரமேஷ், நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் மூல வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும் சோதனையின்போது அமலாக்கத்துறை கைப்பற்றிய மின்னணு சாதனங்கள் மற்றும் ரொக்க பணத்தையும் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர் ED case against Minister KN Nehrus brother dismissed
