காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீதான நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதமாக அமலாக்கத்துறை தலையிட்டது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்; ஆகையால் மத்திய பாஜக அரசு இனியாவது பழிவாங்கும் போக்கை நிறுத்த வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், பணப் பரிமாற்றம் எல்லோரும் செய்கின்றனர். அதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்திருந்தால்தான் குற்றம்.
அதற்கு முதலில், ஒரு குற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்; குற்றம் தொடர்பான வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி ஒரு குற்றச்சாட்டு பதிவு – FIR பதிவு செய்திருந்தால்தான் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் என அமலாக்கத்துறை தலையிட முடியும்.
ஆனால் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் எந்த ஒரு காவல் நிலையத்திலும் குற்றம் என்பது நடந்ததாக, முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்படவில்லை. ஆனால் 2013-ல் தனிநபர் ஒருவர் குற்றச்சாட்டை மட்டும் முன்வைத்தார்.
காவல்துறை FIR பதிவு செய்யாத நிலையில்- தனிநபரின் குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து 2021-ல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. தனிநபர் குற்றம்சாட்டின் அடிப்படையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் அமலாக்கத்துறை தலையிட்டது..
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது FIR போடாத நிலையில் அமலாக்கத்துறையின் இந்த தலையீடு சட்டவிரோதமானது. சட்ட பணப் பரிமாற்றம் என்ற குற்றச்சாட்டு எழாத நிலையில் ஒரு குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. இந்த வாதங்களை ஏற்று நீதிமன்றம், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை ஏற்க மறுத்துவிட்டது. இனியாவது மத்திய அரசு, இத்தகைய பழிவாங்கும் போக்கை கைவிட வேண்டும் என்றார்.
ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு:
