கொரோனா தடுப்புப் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “சென்னை மாநகராட்சி கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, நோய்த் தொற்று பாதித்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு செய்து உத்தரவும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பிலிருந்து, “வீடுகளில் தனிமைப்படுத்தும் செயல்பாட்டை அமல்படுத்தவும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பணியில் 200 ஆசிரியர்களை ஈடுபடுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அனுபவமில்லாத இந்த பணியில் ஈடுபட்ட ஆசிரியை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் சிரமத்துக்குள்ளாகினர். எனவே கரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த மாநகராட்சி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கொரோனா தடுப்பு ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு மட்டுமே ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். களத்திற்கு ஆசிரியர்கள் யாரும் அனுப்பப்படுவதில்லை. உரிய பாதுகாப்பு அம்சங்களும், பயிற்சி வழங்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்க்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், “ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பொறுப்பு கொண்டவர்கள். பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஆசிரியர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
**எழில்**�,