இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நேற்று (அக்டோபர் 22) தொடங்கியது.
டெல்லியில் இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் இந்த 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி முன்னிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். நாடு தழுவிய சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision -SIR) பயிற்சிக்காக அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களின் தயார்நிலையை ஆணையம் ஆய்வு செய்தது.
செப்டம்பர் 10, 2025 அன்று நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப் பயிற்சி தயார்நிலை மாநாட்டின் தொடர்ச்சியாக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் வாக்காளர்களின் எண்ணிக்கை, கடைசி திருத்தத்திற்கான தகுதி வாய்ந்த தேதி மற்றும் கடைசியாக பூர்த்தி செய்யப்பட்ட திருத்தத்தின்படி அந்தந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கின.
மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் தற்போதைய வாக்காளர்களை கடைசி திருத்தத்தின்படி உள்ள வாக்காளர்களுடன் இணைக்க தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஆணையம் மதிப்பாய்வு செய்தது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பதிவு அதிகாரி, உதவி தேர்தல் பதிவு அதிகாரி, வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களின் நியமனம் மற்றும் பயிற்சியின் நிலையையும் ஆணையம் ஆய்வு செய்தது.
