விமர்சிப்பது எளிது: முன்னாள் வீரருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்

Published On:

| By Jegadeesh

Easy to criticize Ashwin hitting back at ex-player

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று அந்நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் , 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றிய இந்திய அணி டி20 போட்டியை 2- 3 என்ற கணக்கில் இழந்தது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி டி20 போட்டியில் சொதப்பியது. முக்கியமாக பேட்டிங் தரவரிசை தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும் சொதப்பி வருகின்றனர்.

இச்சூழலில், முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதாக விமர்சனம் செய்திருந்தார்.

அவரது இந்த விமர்சனத்திற்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 15) பேசிய அஸ்வின்,” இந்த வருடம் உலகக்கோப்பை வருடம். இந்திய அணி உலகக்கோப்பைக்கான முன்னோட்டத்தை இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய கோப்பையில் இருந்து தான் தொடங்க போகிறது. பின்னர் ஆஸ்திரேலிய அணியுடனும் இந்தியா மோத உள்ளது.

இந்த சர்வதேச டி20 தொடரில் நிறைய நேர்மறையான அம்சங்களும் கிடைத்தன. கடந்த டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத ஒரு அணியிடம் இந்தியா இந்த தொடரில் தோல்வியை சந்தித்துள்ளதால் அது பற்றி சமூக வலைதளங்களில் விமர்சிப்பது மிகவும் எளிதானதாகும்.

வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கும் தகுதி பெறவில்லை. ஒரு இளம் வீரராக நீங்கள் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலுமே வெளிநாட்டவர்க்கு தெரியாத சில ரகசியங்கள் இருக்கும். அது வெளிநாட்டு வீரர்களை விட உள்ளூரில் இருக்கும் வீரர்களுக்கு தான் அதிகமாக தெரியும். குறிப்பாக நீங்கள் அனுபவமற்ற இளம் வீரராக இருக்கும் போது வெளிநாட்டு சூழ்நிலைகள் தெரியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அந்த வகையில் நான் என்னுடைய இளம் வயதில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று விளையாடும் போது சிலவற்றை முதலில் கற்க வேண்டியிருந்தது.

அதே போலவே இந்த தொடரில் விளையாடிய இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கும். அது அவர்களை வருங்காலங்களில் சிறந்தவர்களாக முன்னேற உதவும். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2-3  என்ற கணக்கில் தோற்றதால் அனைவரும் ஏமாற்றமடைந்து விமர்சிக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அதேநேரம் இந்த தோல்வியை இரண்டு கோணத்தில் பார்க்க வேண்டும். இத்தொடரால் நமது வீரர்களுக்கு நிறைய அனுபவமும் கிடைத்திருக்கும் என்பதை மறக்க கூடாது” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வடவர்களைத் தலையில் வைத்திருக்கும் தமிழகம்!- பகுதி 15 

சென்னையை குளிர்வித்த மழை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share