ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து 3 ஆம் நாள் மீண்டும் உயிர்தெழுந்த தினம் ஆண்டுதோறும் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் இரவு கண்விழித்துக் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தவக்காலம் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஞாயிற்று கிழமை குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் பெரிய வியாழன், நேற்று முன் தினம் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இன்று ஈஸ்ரட் திருநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இன்றுடன் பிப்ரவரி மாதம் தொடங்கிய தவக்காலம் முடிவடைகிறது.
கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “ஈஸ்டர் வாழ்த்துக்கள். இந்த சிறப்பான தருணம் நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிக்கவும் இது மக்களை ஊக்குவிக்கட்டும். இந்த நாளில் கர்த்தராகிய கிறிஸ்துவின் பக்தி எண்ணங்களை நாம் நினைவுகூருவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த கருணாமூர்த்தியான இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளில் எனது வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
அன்பும் சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்கும் சமுதாயம் தழைக்க இந்நன்னாளில் உறுதியேற்போம்” என்று வாழ்த்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதைப் போலவே உண்மைகள் மீதும், சமூகநீதி மீதும் இன்று இருள் படிந்திருக்கலாம். ஆனால், அந்த இருள் அதிக காலம் நீடிக்காது. அதிக அளவாக 3 நாட்களில் இருள் விலகி ஒளி பிறக்கும் என்பது தான் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் உலகிற்கு சொல்லும் செய்தியாகும். இந்த உலகில் நிகழ்ந்த அனைத்து அநீதிகளும் விரைவில் மறையும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்” என்று வாழ்த்தியுள்ளார்.
மேலும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
பந்திபூர் சரணாலயத்திற்கு வந்த முதல் பிரதமர்!
ஸ்டெர்லைட் போராட்டம்… இப்போதல்ல முப்பது ஆண்டுக் கால தொடர்ச்சி!