சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (மே 21) நேரில் ஆய்வு செய்தார். E.V. Velu warned contractor for Substandard construction
அப்போது, புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தரமற்றதாக இருந்ததால், ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 28 ஆயிரம் சதுர அடியில் ஒரு கட்டிடமும் கூடுதலாக ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 2-வது கட்டிடமும் கட்ட ஈரோட்டைச் சேர்ந்த கொங்கு கன்ஸ்ட்ரக்சன் என்ற கட்டுமான நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் பெற்றிருந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம் ,ஆய்வகம், தீவிர சிகிச்சை பிரிவு என பல்வேறு அறைகள் கட்டப்படுகின்றன.
இந்த கட்டுமானப் பணிகள் அனைத்தும் வரும் 31ஆம் தேதிக்குள் நிறைவு பெற வேண்டும். இந்த நிலையில் கட்டுமானப் பணிகள் தரமாக நடைபெறுகின்றனவா? என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கட்டுமான பணிகளில் பல்வேறு குறைகள் இருந்ததை சுட்டிக் காட்டி ஒப்பந்ததாரரை அழைத்து கண்டித்தார் அமைச்சர் எ.வ.வேலு. மேலும் ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் அமைச்சர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ”அரசு கட்டிடம், சாலை உள்ளிட்டவைகளில் கட்டுமான பணிகளில் தர குறைபாடு- முறைகேடு இருந்தால் எந்த சமரச பேச்சுக்கும் இடமில்லை; ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் எ.வ.வேலு அங்கிருந்த அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். E.V. Velu warned contractor for Substandard construction