தமிழ்நாட்டின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இன்று (அக்டோபர் 20) இ-சேவை மையங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்கள் மற்றும் பொது மக்களுக்கான பொது இணையதளம் மூலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், இதனை மேம்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில், 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தமிழக முதல்வர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ-சேவை மையத்தைத் தொடங்கிடும் வகையில்,
முதலமைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலினிடம், நவீன மேசை கணினி, பயனர் எண்,
மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.
இந்த வசதிகளை பயன்படுத்தி இ-சேவை வலைதளத்திலிருந்து tnesevai.tn.gov.in இணைய வழிச் சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்