ரயில் பயணத்துக்கும் இ-பாஸ் கட்டாயம்!

Published On:

| By Balaji

நாளை முதல் தமிழகத்திலும் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ – பாஸ் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, நிறுத்திவைக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. ஜூன் 1ஆம் தேதியிலிருந்து, முதற்கட்டமாக ஏசி வசதி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முதலில் தமிழகத்துக்கு ரயில் சேவை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஜூன் 1ஆம் தேதி முதல், கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி- நாகர்கோயில், கோவை – காட்பாடி வழித்தடத்தில் 4 ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

ADVERTISEMENT

இதனிடையே நாளை முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் போக்குவரத்து இயக்கத்துக்காகத் தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாகப் பிரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மண்டலம் விட்டு மண்டலம் செல்ல ரயில்களில் பயணித்தால் இ பாஸ் கட்டாயம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, “ரயில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் இ-பாஸ் பெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்திற்கோ/ மாவட்டத்திற்கோ ரயில் மூலம் செல்ல விரும்புவோர் கட்டாயம் ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களைப் பதிவு செய்தி இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

வைரஸ் தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர். ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாக ரயில் நிலையத்துக்கு வர வேண்டும். டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பயணிகள் உணவு, தண்ணீர் ஆகியவற்றை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

**-கவிபிரியா**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share