போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீலகிரி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (ஏப்ரல் 1) முதல் இ – பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. e pass mandatory for nilgiri
மலைகளின் வசிப்பிடமான நீலகிரி, கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில், நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு நாள்தோறும் எத்தனை வாகனங்கள் வருகிறது என்பது தொடர்பாக ஆராய உயர்நீதிமன்றம் வல்லுநர் குழுவை அமைத்தது.
உயர்நீதிமன்றம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நீலகிரி மாவட்டத்தில் வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் இ – பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.

இதேபோல கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள் அனுமதிக்கப்படும். நீலகிரி, திண்டுக்கல் பதிவெண் கொண்ட உள்ளூர் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு இ – பாஸ் கட்டாயமில்லை.
இன்று முதல் இ – பாஸ் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள முள்ளி, கக்கநல்லா, குஞ்சப்பனை, பாட்டவயல், நடுகாணி, சேரம்பாடி உள்ளிட்ட 14 இடங்களில் இ – பாஸ் வாகன சோதனை செய்து வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளது.
கொடைக்கானல் நுழைவு வாயிலான காமக்காபட்டி போலீஸ் சோதனைச் சாவடி, பழனி வழியாக அய்யம்புள்ளி சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள் https://epass.tnega.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. e pass mandatory for nilgiri
