eதிருப்பதி: தரிசனத்துக்குத் தடை வாபஸ்!

Published On:

| By Balaji

திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஒன்பது நாட்களுக்குப் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, திருப்பதி திருமலை தேவஸ்தானம் அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும். இந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால், ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது திருப்பதி திருமலை தேவஸ்தானம்.

திருப்பதி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றபோது வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனத்திற்காக வருகை தருகின்றனர்.

எனவே, கும்பாபிஷேக விழாவின்போது அதிக எண்ணிக்கையிலான பக்தர்களைச் சமாளிப்பது கடினமாக இருக்கும் என்பதற்காகவும், கோயிலைச் சுத்தம் செய்வதற்காகவும் பக்தர்களைத் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என தேவஸ்தான அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

திருப்பதி கோயிலில் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, பல விமர்சனங்கள் எழுந்தன. பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய விதிக்கப்பட்டிருக்கிற தடை சந்தேகத்தை எழுப்புகிறது என நடிகையும் ஆந்திரா எம்.எல்.ஏ.வுமான ரோஜா தெரிவித்திருந்தார்.

பக்‍தர்கள் தரிசனத்தை நிறுத்தி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, திருவாபரணம் உள்ளிட்ட சொத்துகள் அபகரிப்பு தொடர்பான சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக உள்ளது எனக் கோயில் பிரதான அர்ச்சகராக இருந்த ரமண தீட்சிதலு குற்றம்சாட்டினார்.

பலரது எதிர்ப்புகளையடுத்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவும் தேவஸ்தானத்தை வலியுறுத்தி இருந்தார்.

இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி கூறுகையில், “ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஒன்பது நாட்களுக்கு விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படுகிறது. இது தொடர்பாக, வரும் 23ஆம் தேதி திருமலையில் பக்தர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி, ஆலோசனை கேட்கப்படவுள்ளது; அவர்களது முடிவின்படி நடக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்தால், ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்களுக்கு 30 மணி நேரம் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்க முடியும். அப்போது, 15 ஆயிரம் பேரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும். பக்தர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் ஒன்பது நாட்களுக்குத் தரிசனத்தை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது” எனக் கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share