நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு சரண் இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் இருவர். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாத நிலையில் தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அஜித் நடிப்பில் உருவான காதல் மன்னன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சரண் தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்தவர். அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் என முன்னணி கதாநாயகர்களின் படங்களை இயக்கிய சரண் 2010ஆம் ஆண்டு வெளியான அசல் படத்தை அடுத்து திரைத்துறையில் தீவிரமாக இயங்காமல் இருந்தார். அதன் பின் ஏழு வருடங்களுக்குப் பிறகு வினய், சாமுத்ரிகா நடிப்பில் ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரோடு இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தனி ஒருவன், வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கவுள்ள புதிய படத்திலும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.