DVAC clarifies ed officer ankit tiwari arrest
அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு ஆஜர்படுத்தினர்.
அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கித் திவாரி கைது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று (டிசம்பர் 1) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரி பணியாற்றி வருகிறார்.
கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி திண்டுக்கல்லில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர் ஒருவரை அங்கித் திவாரி தொடர்புகொண்டு அவர் மீதான ஏற்கனவே முடித்துவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பேசியுள்ளார்.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கின் மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வந்துள்ளதாகவும், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி அரசு ஊழியர் மதுரை சென்றபோது அங்கித் திவாரி அவரிடம் வழக்கை முடித்து வைக்க ரூ.3 கோடி பேரம் பேசியுள்ளார்.
பின்னர் மேலதிகாரிகளிடம் தாம் பேசியதாகவும் அவர்கள் கூறியபடி ரூ.51 லட்சம் மட்டும் தந்தால் போதும் என்று கூறியுள்ளார்.
அதன்படி நவம்பர் 1-ஆம் தேதி அரசு ஊழியர் அங்கித் திவாரிக்கு முதல் தவணையாக ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.
பின்னர் வாட்ஸப் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வாயிலாக அரசு ஊழியரை தொடர்புகொண்ட அங்கித் திவாரி மீதமுள்ள பணத்தை தரவில்லை என்றால் பெரும் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியது வரும் என்று பலமுறை மிரட்டியுள்ளார்.
இதன்காரணமாக, நவம்பர் 30-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரி மீது அரசு ஊழியர் புகாரளித்துள்ளார்.
நேற்று (டிசம்பர் 1) காலை 10.30 மணியளவில் அரசு ஊழியரிடமிருந்து அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அங்கித் திவாரியிடமிருந்து குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ள வேறு நபர்களை இவர் மிரட்டினாரா என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
வேறு ஏதேனும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு இருக்குமானால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும்.
அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் இவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்; இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – புரூக்கோலி சூப்
DVAC clarifies ed officer ankit tiwari arrest