ஞானதிரவியம் எம்.பி-க்கு துரைமுருகன் நோட்டீஸ்!

Published On:

| By Selvam

திருநெல்வேலி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார் வரப்பெற்றுள்ளது.

ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும் செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம், சிஎஸ்ஐ திருமண்டலத்தில் கல்வி நிலைக்குழு செயலாளராகவும், நெல்லை ஜான்ஸ் மேல் நிலைப்பள்ளியில் தாளாளராகவும் பணியாற்றினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஞானதிரவியத்தை தாளாளர் மற்றும் கல்வி நிலைக்குழு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி திருநெல்வேலி பிஷப் பர்னபாஸ் உத்தரவிட்டார்.

பிஷப் பர்னபாஸின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தை நேற்று பூட்டினர். இதனை தட்டிக்கேட்ட பாதிரியார் காட்பிரே நோபலை ஞானதிரவியம் எம்.பி ஆதரவாளர்கள் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் காட்பிரே புகார் அளித்துள்ளார். மேலும் ஞானதிரவியம் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்பிரே வீடியோ வெளியிட்டிருந்தார். காட்பிரே அளித்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.பி.ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 33 பேர் மீது போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் கடிதம் எழுதியுள்ளார்.

செல்வம்

பட்டமளிப்பு விழா: கறுப்பு ஆடைக்குத் தடை – காரணம் என்ன?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share