மல்லை சத்யா குறித்து பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அவரைப் பற்றி பேசுவதே நேரக் கொலை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 25) மாலை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கலைஞரால் நாடாளுமன்றத்திற்கு சென்ற வைகோ 30 ஆண்டுகள் நாடாளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார்.
12 பிரதமர்களுடன் வாதம்
நேரு சாஸ்திரி தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாளுமன்றத்தில் வாதம் செய்துள்ளார். தொழிலாளர் தினமான மே 1- ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர் வைகோ என்பதையும் அடுத்த நாளே மே 1 விடுமுறை நாளாக அளிக்கப்பட்டது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் என்எல்சி தனியார் மையத்தை தடுத்தது, ரயில்வே டிடிஆர்-களுக்கு படுக்கை வசதி கிடைக்க காரணமாக இருந்தது உள்ளிட்ட பல சாதனைகளை செய்தவர் வைகோ என்றும் தெரிவித்தார்.
அப்போது அவரிடம் மல்லை சத்யா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், “மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம். அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டை நோக்கிதான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். மல்லை சத்யா குறித்து பேசுவதை நேரக் கொலைக்கு சமம்” என காட்டமாக கூறினார்.
மேலும் ஒவ்வொரு இயக்கத்திலும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒருவர் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் வெளியில் செல்வதும் இருக்கும் என்றவர், மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சியிலிருந்து யாரும் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.
குழப்பம் ஏற்படுமா
கூட்டணி கட்சிகளை திமுக விழுங்கி கொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “எதிர்க்கட்சி தலைவர். சட்டமன்ற தேர்தல் வருகிறது. அவருடைய வேலையை செய்கிறார். குழப்பம் ஏற்படுமா என பார்க்கிறார். அதிமுகவின் தலைவருடைய கருத்து அது” என தெரிவித்தார்.
இரட்டை இலக்க தொகுதிகளில் நிற்க வேண்டும் என சொல்லியதாக சொல்கிறார்களே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ”நான் இதற்கு ஏற்கனவே தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. மாட்டி விட்டு விடாதீர்கள்” என்றார்.
