துரை வைகோ – மல்லை சத்யா… கட்டிப்புடிச்சி காம்ப்ரமைஸ்! நடந்தது என்ன?

Published On:

| By Aara

மதிமுகவுக்குள் அதன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணக்குகள் இன்று (ஏப்ரல் 20) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்த்து வைக்கப்பட்டது.

காலை 10.30-க்கு தொடங்கிய இந்தக் கூட்டம் மதிய உணவு இடைவேளையோடு சேர்த்து பிற்பகல் 4 மணி வரை நடந்தது. கூட்டம் முடிந்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். Durai Vaiko-Mallai Sathya… compromise

அப்போது அவர், “மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் திடீரென்று தலையெடுத்து அது தொடர்பாக பதிவுகளிலே பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு எழுதினர்.

பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் அவரவர்கள் கற்பனைக்கு ஏற்ப செய்திகளாகவும் வெளியிட்டனர். இன்று காலை பத்திரிகைகளை பார்த்தாலே உண்மைக்கு புறம்பாகத்தான் செய்திகளை தந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சூழலில் இன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் முதன்மை செயலாளர் துரை வைகோவும் மனம் விட்டு பேசினார்கள். உள்ளம் திறந்து பேசினார்கள். தங்கள் உணர்ச்சிகள் ஆவேசத்தின் வடியலாக வந்த சில வார்த்தைகள் எல்லாவற்றையும் மிக நாகரீகமாக இருவருமே கையாண்டார்கள்.

இதில் மல்லை சத்யா இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது. அப்படிப்பட்ட சூழ்நிலையை ஏற்படாது. அதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்.

ஆகவே, இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று துரை வைகோ கூறினார். நான் இயக்கத்திற்கும் மறுமலர்ச்சி திமுகவுக்கும் தலைமைக்கும் முதன்மை செயலாளருக்கும் பக்க பலமாக உறுதுணையாக இனி உறுதியாக செயல்படுவேன் என்றும் சத்யா சொன்னார். சத்யா கூறியதை ஏற்றுக் கொண்டு நான் எடுத்த முடிவை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறினார். Durai Vaiko-Mallai Sathya… compromise

அதை ஏற்றுக் கொண்டு ஒற்றுமையாக இருந்து இந்த இயக்கத்தை வலுப்படுத்துவோம் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று கூறியதோடு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக் கொண்டு கரம் குலுக்கி நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்ற சமிக்ஞையை அதன் மூலமாக வந்திருக்கிற நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு தெரிவித்தனர். பலத்த கர ஒலிக்கு மத்தியில் எனது வலது பக்கத்தில் துரை வைகோவும் இடது பக்கத்தில் மல்லை சத்யாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்” என்று விளக்கினார் வைகோ.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share