கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்டத்தைச் சேர்ந்த கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று(நவம்பர் 8) விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாகவே தேனி மற்றும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கொட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பி வருவதால் அங்கிருந்து கூடுதல் தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனையடுத்து ஏற்கெனவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டு கட்டங்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் நிர்ணயிக்கப்பட்ட முழுக்கொள்ளளவான 69 அடியை இன்று காலை எட்டியுள்ளது. இன்னும் 2 அடியில் வைகை அணையின் முழு கொள்ளளவு அளவை எட்டிவிடும். அதன் பிறகு வைகை அணையில் இருந்து நீர் முழுதாக திறந்து விடப்படும்.
இதனை கருத்தில் கொண்டு வைகை அணையின் கரையோரத்தில் இருக்கும் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடையாளமாக வைகை அணையின் பொதுப்பணித்துறை அதிகாரி வெள்ள அபாய எச்சரிக்கையை 3 முறை எழுப்பி வைகை அணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதன்படி வைகை அணையின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்களது உடைமைகளுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
போர் கண்ட சிங்கமாய் மேக்ஸ்வெல்… ஆஸ்திரேலியாவின் மறக்கமுடியாத வெற்றி!
ராஷ்மிகா.. கத்ரீனா.. டீப் ஃபேக் செய்யப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிப்பது எப்படி?