மீன்களை விட கருவாட்டுக்கு எப்போதும் கிராக்கி இருப்பதுடன் நல்ல விலை கிடைக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கருவாடு வியாபாரத் தொழில் களைகட்டி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. அதுபோல் தொண்டி முதல் ராமேஸ்வரம், சாயல்குடி, நரிப்பையூர் வரையிலும் ஏராளமான மீனவ கிராமங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியிலிருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் பிடித்து வரும் பல வகை மீன்கள் துண்டு துண்டாக வெட்டி வெயிலில் நன்கு காய வைத்து கருவாடாக்கி வெளியூர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், “மீன்களைவிட கருவாட்டுக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கும். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மட்டுமே மீன்பிடிக்க சென்று வந்தது. இதனால் கருவாடு வியாபாரம் குறைவாகவேதான் இருந்தது.
தற்போது தடைக்காலம் முடிந்து விசைப்படகுகளும் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வர தொடங்கிவிட்டதால் இந்தப் பகுதியில் விசைப்படகு மீனவர்கள் வலையில் பல வகை மீன்கள் கிடைத்து வருகின்றன. நிறைய மீன்களும் கிடைத்து வருகிறது.
இவ்வாறு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய சாவலை, பெரிய திருக்கை, சின்ன திருக்கை, காரல், நெத்திலி உள்ளிட்ட பல வகை மீன்களை துண்டு துண்டாக வெட்டி வெயிலில் நன்கு உலர வைத்து அதில் உப்பு தடவி கருவாடாக பல ஊர்களுக்கு வியாபாரத்துக்கு அனுப்பி வருகிறோம். பல ஊர்களில் உள்ள வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் இங்கு வந்து கருவாட்டை வாங்கிச் செல்கின்றனர்.
நெத்திலி ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், சவாலை 120 ரூபாய்க்கும், காரல் 120 ரூபாய்க்கும், திருக்கை 250 ரூபாய்க்கும் தற்போது விலை போகிறது. விற்பனை அமோகமாக நடக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
– ராஜ்