தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் இருந்து கொல்கத்தா வந்த ‘தாய் ஸ்மைல் ஏர்வேஸ்’ விமானத்தில் இந்திய பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமானப்பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விமானத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
’தாய் ஸ்மைல் ஏர்வேஸ்’ விமான நிறுவனம் இன்று (டிசம்பர் 29 ) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பயணிகள் தங்களுடைய இருக்கைகளை நேராக வைத்திருக்க சொன்னார்கள் விமானப் பணிப்பெண்கள். பயணிகளில் ஒருவர் அதை அலட்சியம் செய்ததோடு தன்னுடைய இருக்கையை சரி செய்யாமல் இருந்தார். பணிப்பெண்கள் அவரிடம் மீண்டும் இருக்கையை சரி செய்ய சொன்ன போதும் அவர் அதை ஏற்க மறுத்தார்.
அவசரநிலையின் போது சாய்ந்து இருக்கும் இருக்கையில் இருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும். அதனால் அவரது இருக்கையை சரி செய்யுமாறு மீண்டும், மீண்டும் சொன்னார்கள். ஆனால் அவர் கேட்கவில்லை. தனது இருக்கையில் சாய்ந்துகொண்டே உட்கார்ந்து இருந்தார்.
இதனால் சக பயணி, அவரிடம் இருக்கை சரி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதையும் அவர் கேட்கவில்லை. இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே மோதலாக மாறியது. பயணிகள் சேர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் யாருக்கும் மதுபானமும் வழங்கப்படவில்லை என்ற ரீதியில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்