கடந்த ஏப்ரல் மாதம் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார் மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகரான ஷைன் டாம் சாக்கோ. அதற்கடுத்த சில நாட்களில் இயக்குனர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரஃப் ஹம்சா இருவரும் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டனர். நடிகர் ஸ்ரீநாத் பாசி படப்பிடிப்புதளத்தில் தனக்கு கஞ்சா வேண்டுமென்று கேட்டதாகப் புகார் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஹசீப் மலபார். Drug use banned in Malayalam Film industry
இது போதாதென்று ஒரு படத்தின் பட்ஜெட்டில் நட்சத்திரங்களுக்குப் போதைப்பொருள் பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படுவதாகப் புகார் தெரிவித்தார் நடிகை சாண்ட்ரா தாமஸ். Drug use banned in Malayalam Film industry
ஏற்கனவே ஹேமா கமிட்டி தந்த அறிக்கையால் மலையாளத் திரையுலகைப் பற்றிய செய்திகளும் வதந்திகளும் தீயாய் பரவிய நிலையில், அந்த ஜுரத்தை இந்த செய்திகள் அதிகமாக்கின.
அந்த களங்கத்தைக் களைகிற வகையில் மலையாளத் திரையுலகில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் வகையில், கேரள படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு திரைப்படம் தொடர்பாகப் படக்குழுவினரோடு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களில், படப்பிடிப்பின்போது போதைப்பொருள் பயன்படுத்த மாட்டேன் என்கிற உறுதியைத் தரும் வகையில் புதிய பிரிவொன்று சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
பணியிடம் என்று வரும்போது தங்குமிடங்களும் அடக்கம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வரும் ஜுன் 26ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்பது உட்படச் சில கட்டுப்பாடுகள் அந்த பிரிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கேரளத் தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு, கேரளத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் சம்மதம் தெரிவித்திருக்கிறது.
விதிவிலக்கின்றி அனைவருக்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பதால், இதன் தாக்கம் மலையாளத் திரையுலகில் கடுமையாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. அது எப்படிப்பட்டது என்பதை இனிவரும் நாட்களில் காணலாம்..!