வேளாண் பணிகளில் ஈடுபடும் 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு டிரோன்களை வாடகைக்கு விடும் நோக்கில், இந்தத் திட்டத்தின் மூலம், 15,000 தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 2024-25 இல் தொடங்கி 2025-26 வரையிலான காலகட்டத்தில் டிரோன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.1,261 கோடி ஒதுக்கப்பட உள்ளதாகவும், 2024-25 நிதியாண்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட முன்னெடுப்புகளால், 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலைத்த வணிகத்தையும், வாழ்வாதாரத்துக்கான ஆதரவும் வழங்கப்படும் எனவும், அவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், கூடுதல் வருமானம் ஈட்டவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…