தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
நாகர்கோயிலை சேர்ந்த சுயம்புலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தமிழகத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் கல்வி நிறுவன வாகன விதிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
பள்ளி வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பல்வேறு விதிகள் உள்ளன.
ஆனாலும், பள்ளி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றுவது, வாகனங்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது,
வாகனங்களில் பள்ளியின் பெயர் குறிப்பிடாமல் இருப்பது, மாணவர்களை கண்காணிக்க போதிய நடத்துனர் இல்லாமல் இருப்பது போன்ற தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பல தனியார் பள்ளிகளில் முறையாக வாகனங்கள் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன.
எனவே, பள்ளி நிறுவன வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்றவும் உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆகியவற்றில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும்.
குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்கள் மூலம் எவ்வாறு அனுப்புகின்றனர். இதனை பள்ளிகள் எவ்வாறு ஏற்கின்றன.
இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் ஏற்காது. பள்ளி வாகனங்களுக்கு என பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
ஆனால் ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் வரும் வாகனங்களுக்கு என்ன விதிமுறை உள்ளது. இது மிக முக்கிய பிரச்சனையாக இருப்பதால், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் பெற்று தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
கலை.ரா
கோவை கார் வெடிப்பு: ”தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது!” – ஆளுநர் ரவி