பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Prakash

பொது இடங்களில் மது அருந்துவது குறித்த வழக்கில், தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”தினமும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைபடுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் ஆகியோர் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், ’தினமும் இரவு 10 மணிக்கு மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவை மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மதுபானம் வாங்குபவர்கள், மதுபானக் கடை முன்பும், சாலையோரத்திலும், அருகில் உள்ள பொது இடங்களிலும் அமர்ந்து மது அருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை பொது இடங்களிலும், கால்வாய்களிலும் வீசி செல்கின்றனர்.

தவிர, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்திவிட்டுச் செல்வதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், தனியாக செல்பவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது.

drinking alcohol in public places case highcourt order

2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை திறந்துவைக்கலாம் என அனுமதிக்கப்பட்டிருப்பதால், மதுபானம் வாங்குபவர்கள் அதை அருந்துவதற்கு பார்கள் இயங்கும் நேரங்களை மாற்றம் செய்தால் பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கலாம் என டிசம்பர் 9ஆம் தேதி தமிழக மதுவிலக்கு துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுத்து, நெறிமுறைபடுத்தும் வகையில் அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு, பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ஜெ.பிரகாஷ்

பாபர் அசாம் மிகப்பெரிய பூஜ்ஜியம்: பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

தமிழ் மொழி வளர்ச்சி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share