திராவிட மாடல் அரசில் அனைத்து துறைகளும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேலோ இந்தியா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐ.என்.எஸ் தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் முலம் நேரு ஸ்டேடியத்துக்கு வருகை தந்தார்.
சிவானந்தா சாலையில் வழிநெடுகிலும் மலர்தூவி, கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேரு ஸ்டேடியத்துக்கு வந்ததும், காரில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை முதல்வர் வரவேற்றார். முதல்வர் ஸ்டாலினின் கையை பிடித்தவாறு விழா மேடைக்கு வந்தார் பிரதமர்.
தொடர்ந்து, தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. பின்னர், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் நிஷித் பிரமானிக், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கு மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.
இதையடுத்து வரவேற்புரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின்,
“இந்த விளையாட்டு நடைபெற முதலமைச்சர்தான் காரணம். 2021 முதல் பல்வேறு சர்வதேச போட்டிகளை நாம் நடத்துகிறோம்.
நமது முதல்வர் தலைமையில் திராவிட மாடல் அரசில் அனைத்து துறைகளும் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகிற வகையில் செயல்பட்டு வருகிறது. அதுபோல விளையாட்டுத் துறையும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
கல்வி, மருத்துவம் என்றாலே தமிழ்நாட்டைத் தான் முதன்மை மாநிலம் என்பார்கள். இன்று விளையாட்டிலும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசுசெஸ் ஒலிம்பியாட் போட்டியை நான்கே மாதத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியது . பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு நிறைய திட்டங்களை, உதவிகளை செய்து வருகிறது. ஊராட்சிகளில் விரைவில் விளையாட்டு உபகரணங்களை வழங்கவிருக்கிறோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ரொம்பவே காஸ்ட்லி… எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்