திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரான தஞ்சை இரா. இரத்தினகிரி (வயது 86) இன்று காலமானார்.

- இரா. இரத்தினகிரி, 15.03.1939-ல் தஞ்சாவூரில் இராமச்சந்திரன்- வள்ளியம்மை தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர்.
- தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று ’தஞ்சாவூர் சிந்தனையாளர் மன்றத்தை’ நிறுவினார்.
- கால்நடைத்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டே திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார். தமிழ்நாடு கால்நடை நலச்சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
- 11-வது திட்டக் குழுவின் உறுப்பினராக, கால்நடை வளர்ப்பு- பால்வளத்துறை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி துறைகளின் ஆலோசகராகப் பணியாற்றினார்.
- மத்திய அரசின் சுரங்கத் துறை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
- உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலராக, ‘பெரியார் இயக்கம்’ மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராகவும் இருந்தார் இரா. இரத்தினகிரி.
- தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவராக 30 ஆண்டுகள் பணியாற்றினார்.
- சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் கருவூலம்’ காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொள்ளாச்சி மா.உமாபதி மற்றும் தஞ்சை இரா. இரத்தினகிரி இருவரும் இணைந்து உருவாக்கினர். இதற்காக கலைஞர், தன் கையெழுத்திட்ட கணையாழியை பரிசாக வழங்கினார்.
- திமுக நிகழ்ச்சிகளைத் தொகுத்து ‘நமது இயக்க நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டு கலைஞரின் பாராட்டைப் பெற்றார்.
- தந்தை பெரியாரின் குடியரசு இதழ்களை சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று சேகரித்து அவற்றை பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டதில் முதன்மை பங்காற்றியவர்.
- ‘பெரியார் நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் திராவிடர் கழக நிகழ்ச்சிகளைத் தொகுத்து நூலாக்கியவர். 1976-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
- தந்தை பெரியார் வாழ்வும் தொண்டும்
சுயமரியாதைச் சூரியன்
தந்தை பெரியார் தத்துவ விளக்கம்
மணக்கும் மனிதநேயம்
மனிதம் மேம்பட
EVR The Revolutionary உள்ளிட்ட நூல்களை எழுதி உள்ளார்; நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதினார். - தஞ்சாவூர் தமிழிசை மன்றத்தின் பெரியார் விருது பெற்றவர்.

86 வயதாகும் தஞ்சை இரா.இரத்தினகிரி, வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
