“முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா?” என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பருவமழைக் காலம் நெருங்கிவரும் நிலையிலும், சில இடங்களில் இன்னும் வடிகால் பணிகள் முடிவடையாமல் உள்ளன.
அதிலும், சில இடங்களில் வீடு மற்றும் கடை வாசல் பகுதிகளின் முன்பு பள்ளம் தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 21ம் தேதி இரவு சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், தண்ணீர் பல இடங்களில் தேங்கியது. இதனால், பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று (ஆகஸ்ட் 22) சென்னைத் தலைமைச் செயலகத்தில் பேசிய தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ”சென்னை நகர் பகுதியில் ஒரு சில இடங்களில் 40 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 50 சதவீத பணிகளும், ஒரு சில இடங்களில் 70 சதவீத பணிகளும் நடைபெற்று உள்ளது.
ஒப்பந்ததாரரிடம் அதிகமான ஆட்கள் இல்லாத காரணத்தினால் தாமதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆட்களை கூடுதலாக பணியமர்த்தி பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
எவ்வளவு சீக்கிரமாக முடிக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். செப்டம்பருக்குள் 80 சதவீத பணிகள் நிறைவடையும்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு விரைந்து மேற்கொள்ளுமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 23) அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் ஆமைவேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பல இடங்களில் இதற்காக தோண்டப்பட்டுள்ள கால்வாய்கள், பாதுகாப்பு தடுப்புகள் எதுவும் இன்றி அப்படியே திறந்த நிலையில் உள்ளன.
செப்டம்பர் மாதத்திற்குள் 80% பணிகள் முடிந்துவிடும் என்று சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் கூறியிருந்தாலும் அதற்கான வேகத்தில் வேலைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.
இப்போதே மழை அடிக்கடி பெய்வதால், பள்ளம் எது? சாலை எது? என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே 100% பணிகளையும் முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனை உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு சென்னை மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க அரசு விரைந்து மேற்கொள்ளுமா” என அதில் பதிவிட்டுள்ளார்.
அய்யர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது என்பது பழமொழி. அதேபோல வடிகால் பணிகள் முடியும் வரை மழை காத்திருக்காது என்பதை அரசு உணரவேண்டும்.
ஜெ.பிரகாஷ்
செப்டம்பருக்குள் 80 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையும்: அமைச்சர் கே.என்.நேரு