தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் முடிவடைந்துள்ளன. இதனையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் நாளை மறுநாள் டிசம்பர் 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாடு முழுவதும் சிறப்புத் திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வாக்காளர் நிலை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
புதிய/ நீக்கப்பட்ட பெயர்கள், இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டைப் பதிவு வாக்காளர்கள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச் சாவடி வாரியான பட்டியல் தயாராகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்களும் (BLAs) இது தொடர்பான கூட்டங்களில் பங்கேற்றனர்.
19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், அதில் இடம்பெற்றுள்ள இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டைப் பதிவு செய்த வாக்காளர்கள் ஆகியோரின் விவரங்களை அணுகுவதற்கு வசதியாக, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்தப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 கோடி பேர் நீக்கம்?
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
