திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கருமாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். பி.காம் பட்டதாரியான இவர் கடந்த 22-ஆம் தேதி முதல் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரை தேடி வந்த குடும்பத்தினர், கருமாங்கிணறு கிணற்றில் அவரை சடலமாக மீட்டனர்.

அருண்குமார் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருண்குமாரின் தாய் விஜயலெட்சுமி அவருக்கு ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
அருண்குமார் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். தொடக்கத்தில் ரூ.1000, ரூ.2000 பணத்தை இழந்த அருண்குமார் நாளடைவில் ரூ.50,000 பணத்தை இழந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கண்டித்துள்ளனர். மனமுடைந்த அருண்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அவர் தனது தனது ட்விட்டர் பக்கத்தில், “திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற பட்டதாரி இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் காலாவதியான பிறகு சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் 73 நாட்களாகியும் அச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் தாமதம் செய்வது நியாயம் அல்ல
ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலைகளும், குடும்பச் சீரழிவுகளும் தொடர்கதையாகி வருகின்றன. சூழலின் அவசரத் தன்மையை உணர்ந்து கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஜனவரி முதல் வாட்சப் சேவை நிறுத்தப்படும் போன்களின் லிஸ்ட் இதோ!
